கொடைக்கானல்: பூஜை திருவிழா தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் கொடைக்கானல் ஸ்தம்பித்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு பூஜை திருவிழா தொடர் விடுமுறை காரணமாக, கடந்த 3 நாட்களுக்காக சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நகர் பகுதி நுழைவிடமான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அனைத்து சுற்றுலா இடங்களிலும் வாகனங்களால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது. முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், ஏரி பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் அலைமோதினர்.
கொடைக்கானலில் பல இடங்களில் தங்கும் விடுதிகளில் அறைகள் இல்லாமல் சில சுற்றுலா பயணிகள் திரும்பினர். சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் குவிந்ததால் முக்கிய சந்திப்புகளில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போலீசார் பணியில் இல்லாததால், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், தனியார் ஓட்டல் பணியாளர்களும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மேலும் கொடைக்கானல் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும் குளுகுளு கிளைமேட்டை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர்.