×

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சுதாகரன் 4.5 ஆண்டு சிறை தண்டனை முடிந்து இன்று காலை விடுதலை

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரன் இன்று விடுதலையாகிறார்.  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, 2வது குற்றவாளியாக சசிகலா, 3வது குற்றவாளியாக இளவரசி, 4வது குற்றவாளியாக வி.என்.சுதாகரன் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூன்று பேருக்கு தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல் குற்றவாளியான ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி இறந்து விட்டார். மற்ற மூன்று பேரும் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சசிகலா, இளவரசி ஆகியோர் நான்காண்டு சிறை தண்டனை முடிந்தும், நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தியதால் கடந்த ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டனர். வி.என்.சுதாகரன் அபராத தொகை செலுத்தாமல் இருந்ததால் விடுதலையாகாமல் இருந்தார்.

இந்நிலையி்ல், சுதாகரனின் அபராதத் தொகை கடந்த வாரம் செலுத்தப்பட்டது.  வழக்கு நடந்த காலத்தில் சுதாகரன் 123 நாட்கள் சிறையில் இருந்துள்ளதால், அதை கழித்து விட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சுதாகாரன் தரப்பு மனு கொடுத்தது. அதை பரிசீலனை செய்த நீதித்துறை 89 நாட்கள் மட்டும் கழித்து விடுதலை செய்ய அனுமதி வழங்கியது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு தனது 56 மாதங்கள் சிறை தண்டனை முடிந்து விடுதலை செய்யப்படுகிறார். அவரை வரவேற்க குடும்பத்தினர் வருகிறார்கள்.


Tags : Sudhakaran , Accumulation of property, trial, Sudhakaran, imprisonment, release
× RELATED ஏலம் விடப்பட வேண்டிய ஜெயலலிதாவின்...