சண்டிகர்: அரியானா மாநிலம், குண்டலி பகுதியில் விவசாயிகள் போராட்ட களம் அருகே, கை, கால் துண்டிக்கப்பட்டு, உடல் முழுவதும் கத்திக்குத்து காயத்துடன் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபரின் சடலம் தடுப்பு வேலியில் தலைகீழாக தொங்க விடப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 10 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி-அரியானா மாநில எல்லையான சிங்கு பகுதியிலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள குண்டலி பகுதியில் நேற்று அதிகாலை வாலிபர் ஒருவரின் சடலம், போலீசார் வைக்கும் பேரிகார்டு தடுப்பு வேலியில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது. சடலத்தின் இடதுகை , வலது கால் துண்டிக்கப்பட்டிருந்தது. உடல் முழுவதும் கூரான ஆயுதம் கொண்டு குத்திய காயங்கள் இருந்தன. சடலத்தை கைப்பற்றிய குண்டலி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சோனிபட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் பஞ்சாப்பின் தரண் தரண் பகுதியை சேர்ந்த லக்பிர் சிங் (35) என்பது தெரியவந்தது.
இவர் கூலித் தொழிலாளி. இதற்கிடையே, லக்பிர் சிங் கொல்லப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் பரவின. நிஹாங் எனப்படும் சீக்கிய மதத்தை சேர்ந்த குழுவினர், அவர்களின் புனித நூலான குரு கிராந்த் சாஹிப்பை அவமதித்ததாக லக்பிர் சிங்கை கொலை செய்ததாக தகவல்கள் பரவின. சில வீடியோக்களில் நீல நிற உடை அணிந்த சீக்கியர்கள், லக்பிர் சிங்கின் மணிக்கட்டை அறுக்கின்றனர். ‘எங்கிருந்து வருகிறாய்’ என அவர்கள் கேட்கின்றனர். அதற்கு லக்பிர் சிங் பஞ்சாபி மொழியில் ஏதோ கூறுகிறார்.
மேலும் மற்றொரு வீடியோவில், நீல நிற உடை அணிந்தவர்கள் சுற்றி நின்று பார்க்க, லக்பிர் சிங் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றி, அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, வீடியோ பரப்பியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். விவசாயிகள் போராட்ட களம் அருகே கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர் சடலம் தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.