×

வங்க, அரபிக்கடல் பகுதியில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்க, அரபிக்கடல் பகுதியில், 2 காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைக்கொண்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

17ம் தேதி(நாளை) மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், பெய்ய கூடும். 18, 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக கடலூர் மாவட்டம் மே மாத்தூரில் 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா தெற்கு ஓடிசா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா-லட்சத்தீவு கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது. இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் கிலோ மீட்ட வேகத்தில் வீசக்கூடும். மேலும் தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி  காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டரிலும், அவ்வப்போது 60 கிலோ மீட்டர்  வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Bay of Bengal ,Arabian Sea ,Tamil Nadu ,Meteorological , 2 Depressions in the Bay of Bengal and the Arabian Sea! Heavy rains in Tamil Nadu for the first 4 days today: Meteorological Department
× RELATED தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது ஒன்றிய...