×

உட்கட்சி தேர்தல், 5 மாநில பேரவை தேர்தலுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர் யார்?: நீண்ட இழுபறிக்கு பின் நாளை காங். செயற்குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் உட்கட்சி தேர்தல், ஐந்து மாநில பேரவை தேர்தல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது.  கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற ேதர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். இடைக்கால தலைவராக இருமுறை சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் கட்சியின் முழுநேர தலைவர் தேர்வு செய்யப்படாதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இந்த விவகாரம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் பஞ்சாப் தலைமை மாற்றம், சட்டீஸ்கர் தலைமை குறித்த பேச்சுகள், மூத்த தலைவர்களின் முரணான கருத்துகள் ஆகியன பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை (அக். 16) காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், உள்கட்சி தேர்தல் நடத்துவது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தல்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், கட்சிக்கு முழுநேரத் தலைவர் தேவை என்று மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

மன்மோகன் சிங் ‘அட்மிட்’
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (89), தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு நெஞ்செரிச்சல் காரணமாக திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். கடந்த 2009ம் ஆண்டு அவர் பிரதமராக இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்துவரும் மன்மோகன் சிங்கை, நேற்று மாலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சென்று பார்த்தார். அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


Tags : Congress party ,Executive Committee , Congress, President, Cong. Executive Committee Meeting
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை...