×

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பான இபிஎஸ் - ஓபிஎஸ் அறிக்கைக்கு கண்டனம்: அமைச்சர் பெரியகருப்பன் அறிக்கை.!

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களின் கண்டன அறிக்கை; தமிழகத்தில் கடந்த 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய தேதிகளில்  இரண்டு கட்டங்களாக நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கான இடைத்தேர்தல்கள் தமிழக தேர்தல் ஆணையத்தால் சிறப்பான முறையில் திட்டமிட்டு, நடுநிலையோடு, தேவையான பாதுகாப்பு வசதிகளோடு எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதவண்ணம் தேர்தல் நடத்தப்பட்டு 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களின் தலைமையிலான 5 மாத கால ஆட்சிக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் தந்து ஊக்குவிக்கின்ற வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தந்துள்ளார்கள்.

தமிழக மக்கள் தந்த அந்த மகத்தான வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தந்த அறிக்கையில் தங்களது இயக்கம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட உண்மையை மறந்து தமிழக மக்கள் அவர்களுக்குத் தந்த படுதோல்வியை மறைத்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்குத் தமிழக மக்கள் தந்த பேராதரவால் பெற்ற மகத்தான வெற்றியையும், மேற்படி தேர்தலை, ஜனநாயக முறையில் நேர்மையாக, நடுநிலையோடு, நடத்திய தமிழகத் தேர்தல் ஆணையத்தையும், கொச்சைப் படுத்துகின்ற வகையில் வெளியிட்டுள்ள அவர்களின் கற்பனை அறிக்கைக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கடந்த 2016 ல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை மூன்று வருடம் தள்ளிப் போட்டது அதிமுக அரசு. மாநிலத் தேர்தல் ஆணையம் 26.9.2016 ல் அறிவிப்பு வெளியிட்ட அன்றே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு- அந்த ஆணையத்தை தனது கைப்பாவையாக்கியது அதிமுக.

“தேர்தல் அறிவிப்பு ஆளுங்கட்சிக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது” என்று உயர்நீதிமன்றம் கண்டனம் செய்து தேர்தல் அறிவிப்பையே ரத்து செய்யும் நிலைக்கு தள்ளியது அதிமுக அரசு. பிறகு உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல்- மாநிலத் தேர்தல் ஆணையரையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வைத்தது அதிமுக அரசு. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் நடத்துகிறோம் என வாக்குறுதி கொடுத்து விட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று “வார்டு மறுவரையறை ஆணையத்தை” உருவாக்கி அவசரச் சட்டம் பிறப்பித்து உள்ளாட்சித் தேர்தலை வேண்டுமென்றே  தாமதம் செய்தது அதிமுக அரசு. பிறகு மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த விடாமல் செய்தது அதிமுக அரசு. பிறகு ஊரக உள்ளாட்சித் தேர்தல் - நகர்ப்புறத் தேர்தல் எனப் பிரித்து - முதலில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அதுவும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்க அறிவித்தது அதிமுக அரசு. அதிமுக நடத்தத் தவறிய ஊரக உள்ளாட்சித் தேர்தலை இப்போது கழக அரசு நடத்தியிருக்கிறது. ஒருவர் இரு வேட்பாளருக்கு முன் மொழிந்த காரணத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் விதிப்படி நிராகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான பாஸ்கரபாண்டியன் “வாக்கு எண்ணிக்கை நாளன்று நான் சொல்லக்கூடிய வேட்பாளர்களைத்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” எனக் கூறியதாக ஒரு கற்பனைக் குதிரையை தட்டி விட்டு ஒரு காரணம் சொல்லியிருக்கிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இப்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அங்கு அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.  எத்தகைய அபாண்ட பழியை - புளுகை ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மீது சுமத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்பது அதிமுகவும் அங்கு வெற்றி பெற்றுள்ளதிலேயே தெரிய வருகிறது. திருப்பத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அத்துமீறி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றதாக கூறியிருக்கிறார்கள். அந்தப் புகாரைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினரே அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று- “வாக்குப் பெட்டிகள் பத்திரமாக இருக்கின்றன - எதுவும் பிரிக்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார். தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சொன்னதைக் கூட திரு.ஓ.பன்னீர்செல்வம்-, திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிந்து கொள்ள முன்வரவில்லை. இருவரும் கொடுத்துள்ள 5 பக்க அறிக்கையில் திமுக வினர் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு நிகழ்ச்சியைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை. இதிலிருந்தே மாநிலத் தேர்தல் ஆணையம் அமைதியாகவும், நடுநிலையுடனும் தேர்தலை நடத்தியுள்ளது எனத் தெளிவாகிறது.      
      
கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் மாநிலத் தேர்தல் ஆணையத்தை தங்களின் கைப்பாவையாக ஆட்டிப் படைத்த - பழைய ஞாபகத்தில் இந்தக்  கற்பனைக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் இருக்கிறது அவர்களது அறிக்கை.
தோல்வியை ஒப்புக் கொள்ளவும் - மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவும் இருவருக்கும் மனமில்லை. திமுக ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. எங்கள் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்கு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை மக்கள் அளித்து விட்டார்கள் என இருவருக்குமே  எரிச்சல். ஆனால் அந்த வெற்றி  - எங்கள் கழகத் தலைவர் இரவு பகலாக கடந்த 5 மாதங்களாக மக்களுக்கு ஆற்றி வரும் பணிக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். பத்தாண்டு காலத்தில் இப்போதுதான் மாநிலத் தேர்தல் ஆணையம் நியாயமாகவும் - நேர்மையாகவும் செயல்பட்டுள்ளது. காவல்துறையும் நடுநிலையோடு நடந்து கொண்டுள்ளது என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி புலம்புவது ஏனோ.


Tags : EPS-OPS ,Minister ,Periyakaruppan , Condemnation of EPS-OPS report on rural local body election results: Minister Periyakaruppan's statement.!
× RELATED அரசின் சாதனை விளக்க கண்காட்சி அமைச்சர் திறந்து வைத்தார்