×

நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தீர்ப்பை உறுதி செய்யக்கோரி மேல்முறையீடு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை:  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா  கடந்த 2013 செப்டம்பர் 9ம் தேதி கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அபிராமபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலத்தை சுப்பையாவும், பொன்னுசாமியும் உரிமை கோரி வந்த நிலையில் அந்த நிலம் டாக்டர் சுப்பையாவுக்கு சாதகமாக கீழ் நீதிமன்றத்தில் தீர்ப்பாகியுள்ளது. இந்த நிலப் பிரச்னை தொடர்பாக இருந்து வந்த முன்பகை காரணமாக டாக்டர் சுப்பையா படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், வழக்கறிஞரான மகன் பாசில், இன்ஜினியரான மகன் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார். கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.  அரசு சிறப்பு வக்கீல் என்.விஜயராஜ் ஆஜரானார். சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் ஜூலை 28ம் தேதி முடிவடைந்த நிலையில் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட ஐய்யப்பன் தவிர மற்ற 9 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு கொலை மற்றும் கூட்டுசதி பிரிவுகளில் இரட்டை தூக்கு தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாகவும் இதனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையா உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பான விபரங்களை அனுப்பிவைத்தது. இந்த வழக்கு, நீதிபதி பி.என்.பிரகாஷ், மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags : Dr. ,Subbaiah ,iCourt , Dr. Subbaiah, murder, appeal
× RELATED டாக்டர் அகர்வால்ஸ் கண்...