×

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலையில் தொடர்ந்து பொருட்கள்: சமூக ஊடகங்களில் வரும் செய்தி தவறு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரிசி பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்து பொருட்களும் தொடர்ந்து வழங்கப்படும். சமூக ஊடகங்களில் வரும் செய்தி தவறானது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கிடையே எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சமீப காலமாக சமூக ஊடகங்கள் சிலவற்றில் ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் பெறும் குடும்பங்களுக்கும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் பொது விநியோகத்திட்ட அரிசி இல்லை என்று எவ்வித முகாந்திரமும் அற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  

அனைவரும் பாராட்டும் வண்ணம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தின் பலன்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும். இதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.  தற்போது அரிசி பெற்றுவரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் இலவச அரிசி மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்து பொருட்களையும் தொடர்ந்து பெற்று பொது விநியோக திட்டத்தின் பலன்களை அடையலாம். சமூக ஊடகங்களில் பரவிவரும் இது குறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Government of Tamil Nadu , Government of Tamil Nadu, Notice
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...