கூடலூர்: கூடலூர் அருகே மனிதர்களை அடித்து கொல்லும் புலியை, மயக்க ஊசி செலுத்துவதற்குள் வனத்துக்குள் தப்பி சென்றது. வனத்துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள மசினகுடி பகுதியில் இருந்து தப்பிய டி23 புலியை நேற்று மாலை ஸ்ரீமதுரை ஊராட்சியை அடுத்த கோழிக்கண்டி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் பதுங்கியிருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். அங்கு, சுற்றி வளைத்து புலிக்கு மயக்க ஊசி செலுத்த முயன்ற போது தப்பிய புலி, கோழிக்கண்டியில் இஞ்சி தோட்டம் ஒன்றில் படுத்திருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் விரைந்து சென்று மயக்க ஊசி செலுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புலி தப்பி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இரவு நேரமானதால் புலியை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் அப்பகுதியில் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.