×

உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை!: ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி..!!

சென்னை: உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி, ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுவதால் நுகர்வோருக்கு உடல்நலபாதிப்பு ஏற்படுவதால், தமிழக அரசு ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி விற்பனைக்கு தடை விதித்து 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், ரசாயனம் கலந்த ஜவ்வரிசி விற்பனைக்கு விதித்த தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தாத அதிகாரிகள், ஈரப்பதத்துடன் கூடிய மரவள்ளிக்கிழங்கு மாவை கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்படுவதாகவும், எனவே ஈரமான கிழங்கு மாவை கொண்டு செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் ஈரப்பதத்துடன் கூடிய ரசாயனம் கலக்கப்பட்ட ஜவ்வரிசி சந்தைகளில் விற்கப்படுவதாகவும், தடை உத்தரவை அமல்படுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடைகளில் விற்கப்படும் ஜவ்வரிசிகளில் 3 மாதிரிகளை வரவழைத்து அவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 3 மாதிரிகளை ஆய்வு செய்து அளிக்கப்பட்ட அறிக்கையில், 2 மாதிரிகள் தரமானதாக இருப்பதாகவும், ஒரே ஒரு மாதிரி மட்டும் சற்று வித்யாசம் உள்ளதாகவும், இருப்பினும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது சம்பந்தமாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் பல சுற்றறிக்கைகள் பிறப்பித்துள்ளதாகவும் தமிழக அரசு தரப்பு வழங்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, தடையை மீறி ஈரமான ஜவ்வரிசி விற்கப்படுவது தெரிந்தால் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம் என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Tags : Government of Tamil Nadu ,iCourt , Sago,ICourt, Government of Tamil Nadu
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...