தேன்கனிக்கோட்டை: கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா தேசிய உயிரியல் பூங்கா வனப்பகுதியிலிருந்து 70 யானைகள், நேற்று முன்தினம் கர்நாடக வனப்பகுதி வழியாக தமிழக எல்லையில் அமைந்துள்ள ஜவளகிரி வனப்பகுதிக்குள் கொட்டும் மழையில் நுழைந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது தளி, தேன்கனிக்கோட்டை பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. அப்பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள ராகி பயிரில், கதிர் பால் பிடித்துள்ள நிலையில், அதை மோப்பம் பிடித்த யானை கூட்டம், ராகி பயிர்களை உண்ண கூட்டம், கூட்டமாக கர்நாடக வனப்பகுதியிலிருந்து தமிழக வனப்பகுதியான ஜவளகிரிக்குள் நுழைந்துள்ளன. நவம்பர் மாத துவக்கத்தில், யானை கூட்டம் ராகி பயிர்களை சாப்பிட வருவது வழக்கம்.
ஆனால், தற்போது முன்கூட்டியே 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானை கூட்டத்திம் இருந்து பயிர்களை பாதுகாக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், வனப்பகுதியை ஒட்டியுள்ள சோலார் மின்வேலிகளை பழுது பார்த்து, சீர்செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.