சென்னை: பவானிசாகர் அணையில் இருந்து வரும் 15ம் தேதி முதல் பாசனத்திற்காக அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு 15.10.2021 முதல் 11.2.2022 முடிய 120 நாட்களுக்கு 9849.60 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி தாலுகாவில் உள்ள 24,504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.