×

சட்டசபை வெற்றியை தொடர்ந்து 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் திமுக பிரமாண்ட வெற்றி: அதிமுக, பாஜ, பாமக, மநீம, நாம் தமிழர் கட்சி படுதோல்வி

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் கட்சியான திமுக அமோக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அதிமுக, பாஜ, பாமக, மநீம, நாம் தமிழர் கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி கடந்த 6ம் தேதி, 9ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக, அதிமுக மற்றும் பாமக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் அவரவர் கட்சி சின்னத்தில் நேருக்கு நேர் போட்டியிட்டனர். மேலும், உள்ளூரில் செல்வாக்குள்ள நபர்கள் பலரும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர். அதேபோன்று, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கட்சிகளின் ஆதரவு மற்றும் தங்களது தனிப்பட்ட செல்வாக்குடன் சுயேட்சை சின்னத்தில் போட்டியினர்.

அதன்படி, தேர்தல் நடைபெற்ற மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை 9 ஆகும். மொத்த மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 140 ஆகும். மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 74ம், மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் எண்ணிக்கை 1381, மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 2,901, மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 22,581 ஆக இருந்தது. இந்த இடங்களுக்கான தேர்தல்தான் கடந்த 6ம் தேதி மற்றும் 9ம் தேதி நடைபெற்றது.
இந்த 9 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் 2,981 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டு கட்ட தேர்தலில் சுமார் 78 சதவீதம் வாக்குகள் பதிவானது. 14,573 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் மொத்தம் 41,500 வாக்கு பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் வாக்களித்த மக்கள் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் அளித்தனர். அதன்படி, மாவட்ட கவுன்சிலருக்கு ஒரு ஒட்டு, ஒன்றிய கவுன்சிலருக்கு ஒரு ஓட்டு, ஊராட்சி மன்ற தலைவருக்கு ஒரு ஓட்டு, ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு ஒரு ஒட்டு என 4 வாக்குகளை பதிவு செய்தனர். மேலும், ஒருவர் 4 ஓட்டு போட வேண்டியது இருந்ததால் மின்னணு இயந்திரம் பயன்படுத்தாமல், வாக்குச்சீட்டு முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி 4 வாக்குச்சீட்டும் 4 வெவ்வேறு கலரில் அச்சிடப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வாக்குப்பதிவுகள் முடிந்தது, வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 31,245 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

அதன்படி, காலை 8 மணிக்கு வாக்குபெட்டிகள் பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, வாக்குகள் மேஜைகள் மீது கொட்டப்பட்டது. பின்னர் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலருக்கான மஞ்சள் நிற வாக்குச்சீட்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலருக்கான பச்சை நிற வாக்குச்சீட்டு, ஊராட்சி தலைவருக்கான இளம்சிவப்பு நிற வாக்குச்சீட்டு, ஊராட்சி உறுப்பினருக்கான வெள்ளை நிற வாக்குச்சீட்டு என தனித்தனியாக பிரிக்கப்பட்டது. பின்னர் 50, 50 கட்டுகளாக வாக்கு எண்ணும் அலுவலர் பிரித்து கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தனித்தனி மேஜைக்கு 50 கட்டுகள் அடங்கிய வாக்குச்சீட்டுகள் கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் அலுவலர்கள் மூலம் எண்ணப்பட்டது. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் நேற்று நள்ளிரவு நிலவரப்படி 120 இடங்களுக்கும் அதிகமாக பெற்று ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெற்றது. இதில் சில இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கட்சிக்கு வெறும் 4 இடங்களே கிடைத்தது. மற்ற கட்சிகளான பாமக, பாஜ, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர்.

அடுத்ததாக, 1,381 இடங்களில் நடைபெற்ற ஒன்றிய கவுன்சிலர் தேர்தலிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 800 இடங்களுக்கும் அதிகமாக பெற்று வெற்றி பெற்றது. இன்னும் பல இடங்களில் திமுக முன்னணியில் உள்ளது. 55 இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்தில் அதிமுக உள்ளது. மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோன்று, 2,901 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களே அதிக இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 2வது இடத்தில் அதிமுக இருந்தது. 22,581 இடங்களுக்கு நடைபெற்ற ஊராட்சி மன்ற கவுன்சிலர் பதவிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இதிலும், திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர். 2வது இடத்தில் அதிமுக ஆதரவு வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.

வாக்குச்சீட்டு முறையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், இன்று காலை வரை வாக்குகள் எண்ணும் பணி நடந்து வந்தது. இன்றுதான் முழு முடிவுகள் விவரமாக தெரியவரும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும், வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 74 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, அதிமுக இதுவரை சந்தித்திராத தோல்வியை இந்த தேர்தலில் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியின் அதிகார பலம், பண பலத்தையும் மீறி திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 9 மாவட்டங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை காணாத தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. அதேபோல மற்ற கட்சிகளான பாஜக, பாமக, மநீம, நாம் தமிழர்  உள்ளிட்ட சிறிய கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் காணாமல் போயுள்ளன.

முன்னிலை நிலவரம்
மாவட்ட கவுன்சிலர்கள் மொத்த இடங்கள் 140
மாவட்டங்கள்    இடம்    திமுக +    அதிமுக +    பாமக    அமமுக    மற்றவை
காஞ்சிபுரம்    11    11    0    0    0    0
செங்கல்பட்டு    16    16    0    0    0    0
வேலூர்    14    11    0    0    0    0
ராணிப்பேட்டை    13    11    1    0    0    0
திருப்பத்தூர்    13    12    1    0    0    0
விழுப்புரம்    28    21    0    0    0    0
கள்ளக்குறிச்சி    19    18    0    0    0    0
திருநெல்வேலி    12    10    0    0    0    0
தென்காசி    14    14    0    0    0    0
மொத்தம்    140    124    2    0    0    0

ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்த இடங்கள் 1381
மாவட்டங்கள்    இடம்    திமுக +    அதிமுக +    பாமக    அமமுக    மற்றவை
காஞ்சிபுரம்    98    84    10    0    0    2
செங்கல்பட்டு    154    126    6    0    0    0
வேலூர்    138    57    5    2    0    0
ராணிப்பேட்டை    127    51    1    0    1    2
திருப்பத்தூர்    125    65    13    0    0    1
விழுப்புரம்    293    83    12    3    0    3
கள்ளக்குறிச்சி    180    67    4    0    0    4
திருநெல்வேலி    122    53    7    0    2    6
தென்காசி    144    65    5    0    0    1
மொத்தம்    1381    651    63    5    3    19

* சாவி தொலைந்ததால் பூட்டை உடைத்து வாக்குப்பெட்டி திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி போகலூர் ஊராட்சி ஒன்றியம், 7வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. 7 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதலில் தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டியை திறக்க அதிகாரிகள் முயன்றனர். ஆனால் வாக்கு பெட்டியின் சாவி தொலைந்ததால் பூட்டை திறக்க முடியவில்லை. மாற்று சாவிகளை பயன்படுத்தியும் முடியாததால் பூட்டை உடைத்து அதில் இருந்த தபால் வாக்குகளை எடுத்து எண்ணும் பணி நடந்தது.

* அதிமுக எம்எல்ஏக்கள் வகித்த பொறுப்புகளில் திமுக வெற்றி
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு 10வது வார்டு உறுப்பினராக இருந்தவர், தற்போதைய ஓமலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மணி. இவர் எம்எல்ஏவானதும், பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்போது தேர்தல் நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட சம்புசண்முகம் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுகவிடமிருந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. இதேபோல் கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் நல்லதம்பி. கோவிந்தம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரான நல்லதம்பி, எம்எல்ஏவானதும், ஊராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு நடந்த தேர்தலில் கோவிந்தம்பாளையம் ஊராட்சி தலைவராக, திமுக சார்பு வேட்பாளர் விஜயா வெற்றி பெற்றுள்ளார். இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் வகித்த 2 பொறுப்புகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

ஒரு ஓட்டில் வென்ற ஊராட்சி தலைவர்
* வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பரந்தாமன், சீதாராமன், பங்காரு ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இதில், பரந்தாமன் 464 வாக்குகள் பெற்றார். சீதாராமனுக்கு 462 வாக்குகளும், பங்காருக்கு 324 வாக்குகளும் கிடைத்தது. இதையடுத்து தபால் ஓட்டு எண்ணிக்கையின்போது சீதாராமனுக்கு ஒரு ஓட்டு கூடுதலாக கிடைத்தால் 463 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
* திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே  ஆமந்தகடவு  ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வேலுதாயி,  ஜீவிதா ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 292 வாக்குகளில் 225 வாக்குகள் பதிவாகின. இதில் வேலுதாயி 112 ஓட்டுகளும், ஜீவிதா 111 ஓட்டுகளும்  பெற்றனர்.  2 ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வேலுதாயி வெற்றி பெற்றார்.

* வாக்கு எண்ணும்போது மயங்கி விழுந்த ஆசிரியை
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இறைவன் காடு அருகே அன்னை பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த பணியில் ஒடுகத்தூர் அரசு பள்ளி ஆசிரியை பூரணி(32) என்பவரும் ஈடுபட்டார். காலையில் தொடங்கிய பணி இரவு வரை நீடித்தது. இந்நிலையில், இரவு 7 மணியளவில் ஆசிரியை பூரணி திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் பணியிலிருந்த ஆசிரியை திடீரென மயங்கி விழுந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : DMK ,AIADMK ,BJP ,Manima ,Naam Tamil Party , DMK wins in 9 district local body elections following assembly victory: AIADMK, BJP, BJP, Manima, Naam Tamil Party defeated
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...