டோக்கியோ: ஜப்பான் விண்வெளி வீரர் கொய்ச்சி வகடா விண்வெளிக்கு 5வது முறையாக அடுத்தாண்டு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பயணிக்க உள்ளார். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் 5வது விண்வெளி பயணமான `டிராகன்’ அடுத்தாண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல உள்ளது. இதில் பயணிப்பதற்காக ஜப்பான் விண்வெளி வீரர் கொய்ச்சி வகடா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவரது 5வது விண்வெளி பயணமாகும்.
இதற்கு முன்பு, அவர் 1996, 2000, 2009ம் ஆண்டுகளில் 3 முறை அமெரிக்காவின் விண்கலம், 2013ம் ஆண்டில் ரஷ்யாவின் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று திரும்பி உள்ளார். வரும் 2022ம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் 5வது முறையாக பயணிக்க உள்ளார்.
இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பும் 5வது விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஜப்பான் விண்வெளி வீரர்கள் விண்வெளி செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக வகடா விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார். இவருடன் நாசா வீரர்கள் நிகோல் மேன், ஜோஷ் கசடா ஆகியோரும் விண்வெளி மையத்துக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.