பீஜிங்: ஊடக நிறுவனங்களில் தனியார் முதலீடு செய்வதை தடை செய்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ ஊடக நிறுவனங்களில் தனியார் முதலீடுகளை தடை செய்யப்பட்ட முதலீடுகளாக அறிவிப்பது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மாநில மேம்பாடு மற்றும் சீர்திருத்த ஆணையம்’ கூறியுள்ளது. இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இது பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக கழுத்தை நெரிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்க்சி பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற விரிவுரையாளர் கூறுகையில், ‘ ஊடகங்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உறுதியாகியுள்ளது. பொதுத்துறை முதலீடு இல்லாத நிறுவனங்கள் செய்தி சேகரிப்பு, எடிட்டிங், அல்லது ஒளிபரப்பு சம்பந்தப்பட்ட வணிகத்தில் ஈடுபடக்கூடாது’ என்ற அடக்குமுறையை இது வெளிப்படுத்துகிறது. மேலும், செய்தி நிறுவனங்கள், ஊடகம், ஆன்லைன் செய்திகள் ஆகியவற்றில் தனியார் முதலீடுகளை அரசு கட்டுப்படுத்துகிறது’ என்றார். இதே போன்று அரசியல், பொருளாதாரம், ராணுவம், ராஜதந்திர அமைப்புகளில் தனியார் முதலீடுகளை சீனா தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.