புதுடெல்லி: டெல்லியில் ஐஎஸ்ஐயுடன் தொடர்புடைய பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு டெல்லியின் லக்ஷ்மி நகர் பகுதியில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதியை போலீசார் திங்களன்று இரவு கைது செய்தனர். விசாரணையில் இவன் பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளதோடு, டெல்லியில் தீவிரவாத தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் பெயர் முகமது அஸ்ரப் அலியாஸ் என தெரியவந்துள்ளது.
மேலும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த அஸ்ரப் வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளான். போலி அடையாள அட்டைகள் மூலமாக மத பிரசாரம் செய்பவர் என்ற பெயரில் 10 ஆண்டுகள் இந்தியாவிற்குள் தங்கியிருந்துள்ளான். அவ்வப்போது வேறு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளான். பள்ளிப்படிப்பு மற்றும் 6 மாத பயிற்சிக்கு பின் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ் மூலமாக நேரடியாக பணியமர்த்தப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அஸ்ரப்பிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.