திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. 16ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் உள்பட 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாறு, அருவிக்கரை அணைகள் திறக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரவு நேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் அடூரில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மலையாள பத்திரிகை நிருபர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். நேற்று அதிகாலை மலப்புரம் மாவட்டம் கரிப்பூரில் வீடு இடிந்து 8 வயது மற்றும் 6 மாத குழந்தை என்று 2 பெண் குழந்தைகள் இறந்தனர். கொல்லம் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு முதியவர் ஒருவர் மரணமடைந்தார். இவ்வாறு மழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.