ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ப்ரீபோரா, இமாம்சாஹப் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மாலை பாதுகாப்பு படை வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இமாம்சாப் பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் திருப்பி துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் ஒருவன் சமீபத்தில் பானிப்பூரி வியாபாரியை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. தப்பி சென்ற தீவிரவாதிகளை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதேபோல் நேற்று காலை ப்ரீபோரா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 மாவோயிஸ்ட் கொலை: ஒடிசா மாநிலத்தில் மால்காங்கிரி மாவட்டத்தில் சிறப்பு படை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் இரண்டு பெண் மாவோயிஸ்ட் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.