சேலம்: சேலம் அருகே தண்ணீர் குழாயை உடைத்து, விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏவின் தந்தை உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பெரியேரிப்பட்டி பூதனூரை சேர்ந்தவர் பிரபாகரன் (38), விவசாயி. இவரது வீட்டருகே மேல்நிலை குடிநீர் தொட்டி இருக்கிறது. கடந்த 29ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி, குமரவேல் ஆகியோர், அந்த குடிநீர் தொட்டியின் குழாயை உடைத்தனர். இதை தட்டிக்கேட்ட பிரபாகரனை அசிங்கமாக திட்டி விட்டு சென்றுள்ளனர். பின்னர், அதே நாள் மாலை, பிரபாகரனின் விவசாய கிணற்றில் இருந்து அவரின் வீட்டிற்கு வரும் தண்ணீர் குழாயை நல்லதம்பி, குமரவேல் ஆகியோர் கடப்பாரை, மண்வெட்டியால் வெட்டி உடைத்தனர்.
ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டபோது, பெரியேரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி தான், குழாயை உடைக்க சொன்னார். மீறி பேசினால் வெட்டி சாய்த்து கொன்று விடுவோம் என மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இதுபற்றி தொளசம்பட்டி போலீசில், பிரபாகரன் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, நல்லதம்பி, குமரவேல், ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி ஆகிய 3 பேர் மீதும் குழாயை உடைத்து சேதப்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, ஓமலூர் அதிமுக எம்எல்ஏ மணியின் தந்தை ஆவார். விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.