×

டெல்டாவில் 5வது நாளாக விடிய விடிய மழை: அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் குறுவை பயிர் சேதம்

திருச்சி: நாகை மாவட்டத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் தொடங்கிய மழை இடி மின்னலுடன் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது. திருவாரூரில் மாலை 6 மணியிலிருந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை மிதமான மழையும், தஞ்சை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழையும் பொழிந்தது. திருச்சியில் விடிய விடிய தூறல் மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் மதியம் 2 மணி  முதல் 3 மணி வரையும், பின்னர் 3.30 முதல் இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன்  கனமழை கொட்டியது.

பச்சமலை பகுதிகளில் தொடர் மழையால் மருதையாற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொட்டரை நீர்த்தேக்கம் நிரம்பி வருகிறது. புதுக்கோட்டை  முருகன் நகர், குறிஞ்சி நகர் பகுதிகளிலும், அரியலூர்  பெரியார் நகரிலும் வீடுகளுக்குள்  மழைநீர் புகுந்தது. தஞ்சை பாலோ நந்தவனம் பகுதியில் பாதாள  சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி மழைநீருடன் கலந்து  அப்பகுதியில் உள்ள 40 வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து துர்நாற்றம் வீசியது. நீடாமங்கலம், சித்தமல்லி,  பரப்பனாமேடு, பூவனூர், ராயபுரம், ரிஷியூர் உள்ளிட்ட இடங்களில் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்கதிர்கள், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 100  ஏக்கர் நெற்பயிர்,

வல்லம்  அருகே சித்திரகுடி, வேங்கராயன்குடிக்காடு உள்பட ஏராளமான கிராமங்களில் அறுவடைக்கு தயாரான சுமார்  300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்தால்  அறுவடை பணி பாதிக்கப்படுவதுடன், நெல்மணிகள் முளைக்கும் அபாயம் உள்ளதாக  விவசாயிகள் கவலை தெரிவித்தனர். உப்பு உற்பத்தி பாதிப்பு: தமிழகத்தில் தூத்துக்குடி அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம்  வகிக்கும் வேதாரண்யத்தில் 9000 ஏக்கரில்  830 சிறு உற்பத்தியாளர்கள் மூலம் ஆண்டுதோறும் 5  லட்சம் முதல் 6 லட்சம்  மெட்ரிக் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று இரவு உப்பள  பகுதிகளில்  பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு  உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உப்பு  பாத்திகளில் மழைநீர் தேங்கி உள்ளதால்  வழக்கமாக அக்டோபர் மாதம் நிறைவடையும்  உப்பு உற்பத்தி முன்கூட்டியே இந்த  ஆண்டுக்கான  பணிகள்  நிறைவு பெற்றது. இதனால் 10 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்கள் வேலை  இழந்துள்ளனர். 3 பேர் பலி: மயிலாடுதுறை மாவட்டம்  கொள்ளிடம் அருகே  கடலோர பகுதியான கூழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர்  முத்து(45). இவரும்,  இவரது மனைவி லட்சுமியும்(42) நேற்று அத்தியாவசிய  பொருட்களை வாங்கிக்கொண்டு டூவீலரில் வீடு திரும்பினர். கூழையார்  கிராமம் பெருமாள் கோயில் அருகே சாலையோரம் மழையின் காரணமாக அறுந்து தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி டூவீலரில் சென்ற லட்சுமியில் கழுத்தில் பட்டதில் மின்சாரம் தாக்கி அங்கேயே இறந்தார்.  

இதேபோல்  குத்தாலம் அருகே திருவாவடுதுறை யாதவ தெரு சந்திரசேகர் மனைவி மாரியம்மாள்(40) குப்பைகளை சுத்தம் செய்தபோது வீட்டில் அறுந்து தொங்கிய ஒயரை தொட்டபோது  மின்சாரம் பாய்ந்து இறந்தார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள  எண்ணானி வயல் கிராமத்தை சேர்ந்தவர் தேவி(45). விவசாயக் கூலித் தொழிலாளி.  நேற்று மாலை  வீடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்டார். அப்போது  மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே இறந்தார்.  

இன்று காலை டெல்டா மாவட்டங்களில் மழை அறிகுறியுடன் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஒரு சில இடங்களில் வெயில் அடித்தது. மழை அளவு(மி.மீ) விபரம்: ‘லப்பைகுடிகாடு 89, பெரம்பலூர் 40, எறையூர் 36, கிருஷ்ணாபுரம்  28, தழுதாளை 52, வி.களத்தூர் 26, வேப்பந்தட்டை 39. தோகைமலை 20, பாலவிடுதி 19, மைலம்பட்டி 26. அரியலூர் 100.6, திருமானூர் 74.2, ஜெயங்கொண்டம் 60, ஆண்டிமடம் 31,





Tags : Delta , 5th day of torrential rains in Delta: Crop damage to 500 acres ready for harvest
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு