×

முடிந்தவரை போராடினோம்... வெற்றி வசப்படவில்லை: தோல்விக்கு பின் கேப்டன் கோஹ்லி உருக்கம்

ஷார்ஜா: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தின . டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அணி 20 ஓவர்களில் 138 ரன்களை மட்டுமே எடுத்தது. தேவ்தத் படிக்கல் (21), கோஹ்லி (39) ரன்களுக்கு வெளியேறினர். கோஹ்லி விக்கெட்டை வீழ்த்திய சுனில்நரேன் இதன் பின்னர் வந்த கர்பரத் (9), மேக்ஸ்வெல் (15), டிவில்லியர்ஸ் (11) ஆகியோரையும் தனது மாயாஜால பந்துவீச்சால் அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.

139 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது. தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 29 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களும் எடுக்க முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் வந்த ராகுல் திரிபாதி 6 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதன் பிறகு வந்த சுனில் நரேன் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை கேகேஆர் பக்கம் திருப்பினார். சுனில் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ராணா (23), தினேஷ்கார்த்திக் (10) ரன்களில் அவுட் ஆயினர். பின்னர் வந்த கேப்டன் மோர்கன் 5 ரன்னிலும், ஷகிப்அல்ஹசன் 9 ரன்னிலும் அவுட் ஆகாமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.

கொல்கத்தா 19.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன் 4 விக்கெட்டும் , பெர்குசன் 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் கேகேஆர் குவாலிபயர் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆட்ட நாயகனாக சுனில்நரேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி செயல்பட்ட கடைசி போட்டி இதுவாகும். ஏனெனில் இந்த தொடருடன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதுகுறித்து ஆட்டம் முடிந்த பிறகு பேசிய கோஹ்லி, ``இந்த ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக ஸ்பின்னர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர்.

மிடில் ஓவர்களில் எங்களின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்து அதிர்ச்சி கொடுத்தனர். இந்த போட்டியை பொறுத்தமட்டில் மோசமான பேட்டிங் என்று கூறுவதைவிட சிறப்பான பவுலிங் என கூறுவது தான் சரியாக இருக்கும். இதேபோல ஆர்சிபியின் பவுலிங்கும் சிறப்பாக இருந்தது. முடிந்தவரை நாங்கள் போராடினோம். ஆனால் மிடிலில் ஒரு ஓவரில் அதிக ரன் கொடுத்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தாண்டு ஆர்சிபி கேப்டனாக நான் ஒரு விஷயத்தை முன்னெடுத்தேன்.

நிறைய இளம் வீரர்கள், தங்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தேன். 120 % சதவீதம் என்னால் முடிந்ததை செய்துவிட்டேன். முழு முயற்சியையும் கொடுத்துவிட்டேன். அடுத்த 3 ஆண்டுகளை எதிர்நோக்கியுள்ளேன். நான் நிச்சயம் ஆர்சிபி அணிக்காக விளையாடுவேன். ஐபிஎல் தொடரில் எனது கடைசி போட்டி வரை ஆர்சிபி அணிக்காக உழைப்பேன்’’ என உருக்கமுடன் தெரிவித்தார்.

பிராவோ சாதனையை சமன் செய்த ஹர்ஷல்பட்டேல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் நடப்பு ஐபிஎல் சீசனில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 2012 முதல் விளையாடி வரும் ஹர்ஷல் மொத்தம் 63 போட்டிகளில் ஆடி  78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 32 விக்கெட்டுகள் நடப்பு சீசனில் பெங்களூர் அணிக்காக எடுத்தவை. சென்னை அணியின் பிராவோ 2013 சீசனில் 18 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

ஆனால் ஹர்ஷல் பட்டேல் 15 போட்டிகளில் மட்டுமே விளையாடி 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஆட்டத்தின் 17-வது ஓவரில் நரேன் கொடுத்த கேட்சை தேவ்தத் படிக்கல் நழுவவிட்டார். அதை அவர் பிடித்திருந்தால் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்திருப்பார். எப்படியும் அவர் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலருக்கான பர்பிள் கேப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

Tags : Kohli , We fought as hard as we could ... No victory: Captain Kohli melts after defeat
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு