கம்பம் : கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில், ‘அசைவ உணவு சாப்பிட்டாலும் தடுப்பூசி போடலாம்’ என்ற தினகரனின் செய்தியை காண்பித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி தனியார் மகாலில் கடந்த மாதம் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது அசைவ உணவு சாப்பிட்டால் தடுப்பூசி போடக்கூடாது என்ற வதந்தி பரவியது. இதை போக்கும் வகையில், ஊராட்சி மூலம், அசைவ உணவு சாப்பிட்டாலும் தடுப்பூசி போடுவதில் பிரச்னையில்லை என பிச்சைமுத்து என்பவரைக் கொண்டு தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது குறித்து தினகரனில், ‘சும்மா வதந்தியை பரப்பாதீங்கப்பா’ என்ற தலைப்பில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், தண்டோராக்காரர் பிச்சைமுத்து தினகரன் நாளிதழில் படத்துடன் வெளிவந்த செய்தியை லேமினேசன் செய்து அதை கையில் வைத்து சுருளிப்பட்டியில் வீடுதோறும் காண்பித்து கொரோனா தடுப்பூசி விழிப்புனர்வு ஏற்படுத்தி வருகிறார். அவரது இந்த விழிப்புணர்வு செயலை சுருளிப்பட்டி சேர்மன் நாகமணி மற்றும் டாக்டர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.