- குழந்தை கேட்டல் சிறப்பு சிகிச்சை மையம்
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- Geriatric புற்றுநோய் ஸ்பெஷலிஸ்ட் சிகிச்சை மையம்
ஆண்டிபட்டி : தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கு செவித்திறன் சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் முதியவர்களுக்கான புற்று நோய் சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவை நேற்று தொடங்கப்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதியோர்களுக்கான புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம், பிறந்த குழந்தைகளுக்கான பிறவி குறைபாடு செவித்திறன் சிறப்பு சிகிச்சை மையம் சிகிச்சை பிரிவுகளை முதல்வர் பாலாஜிநாதன் திறந்து வைத்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு, 20 படுக்கை வசதிகளுடன் தனி சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு 5 தீவிர சிகிச்சை பிரிவும் உள்ளது. மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள் அனைவருக்கும் புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பிரசவ வார்டு பகுதியில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் செவித்திறன் குறைபாடு பரிசோதனை மேற்கொள்ளும் சிகிச்சை பிரிவு மையமும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளுக்கு பிறவி ஊனத்தை நீக்கலாம். தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்த ஆலோசனை, அறுவை சிகிச்சை குறித்த ஆலோசனை, தாய்ப்பால் அவசியம் குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.
மனநல தின விழிப்புணர்வு கூட்டம்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக மனநல நாள் விழிப்புணர்வு பேரணி முதல்வர் பாலாஜிநாதன் தலைமையில், முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி மனநல மருத்துவதுறை அலுவலகம் வரை சென்றது. இதில் செவிலியர் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். பின் மனநல மருத்துவத்துறை அரங்கில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பாலாஜிநாதன் பேசியதாவது: உடல்நலம், மனநலம், சமுகநலம் ஆகிய மூன்றையும் ஒருவர் பெற்றிருந்தால் மட்டுமே அவர் ஆரோக்கியமானவர் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.
குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரையும் பாதிக்கும் மனநல பிரச்னைகள் பற்றிய அறிகுறிகளை அறிந்து அதிலிருந்து மீள்வதற்காக முயற்சிகளை எடுக்க வேண்டும்’ என்று பேசினார். பின்னர் மருத்துவமனையில் பேறுகால பிந்தைய மனநல ஆலோசனை உள்ளிட்ட பல பிரிவுகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மனநலமருத்துவர் அனந்த கிருஷ்ணகுமார், மருத்துவதுறை போராசிரியர் திருநாவுக்கரசு, துணை கண்காணிப்பாளர் கண்ணன் போஜராஜன், உயர்நிலை மருத்துவர், ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான மருத்துவத்துறை அதிகாரிகள், பலதுறை மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.