×

வெவ்வேறு சம்பவத்தில் 2 குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி-மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர் கூட்டத்தில், நேற்று வெவ்வேறு சம்பவத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த தாய், மகன் மற்றும் தம்பதி ஆகிய 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது.

இதில் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூரை அடுத்த அகரஆதனூரை சேர்ந்தவர் மதன்மோகன், இவர் தனியார் நிதி நிறுவனத்தில் விவசாயக் கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார். இவரது டிராக்டர்களை விவசாயி அனுமதியின்றி ஆளில்லாத நேரத்தில் கடத்திச்சென்று இவரது கையெழுத்தை போலியாக போட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோசடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மதன்மோகனும், அவரது தாயார் உமாமகேஸ்வரியும் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு சிறிது நேரத்திற்குள்ளாக சீர்காழியை அடுத்த கடவாசல் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், அவரது மனைவி குணவதி ஆகிய இருவரும் சொத்துப் பிரச்னையில் வழக்கு நீதிமனறத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பாலசுப்பிரமணியனின் சகோதரர்களின் மனைவிகள் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், விவசாயம் செய்யப்பட்ட வயலில் புகுந்து டிராக்டரை விட்டு பயிர்களை அழித்துள்ளனர்.

ஊர் பஞ்சாயத்தால் கட்டப்பஞ்சாயத்துப்பேசி தங்களை துன்புறுத்துகின்றனர் என்றும், புதுப்பட்டினம் காவல்துறையினர் எதிரிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் தங்களை ஊரைவிட்டே விரட்டி வருகின்றனர் என குற்றம் சுமத்தி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அவர்களை பொதுமக்களும், காவல்துறையினரும் காப்பாற்றினர். ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டு சம்பவம் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களைக் காப்பாற்ற உத்தரவிட்டார்.



Tags : Mayiladuthurai ,Collector , Mayiladuthurai: At a low-level meeting held at the Mayiladuthurai District Collector's Office, two different incidents took place yesterday
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...