×

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி தினத்தன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!!

சென்னை: விஜயதசமி தினத்தன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ம் தேதி வெள்ளிக்கிழமையில் வருகிறது.

கோயில்களில் முக்கிய பூஜைகள் நடத்தப்பட உள்ளதால் அன்றைய தினம் கோயில்களை திறக்க அனுமதிக்க வேண்டும். சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை அனுமதிக்கும் அரசு, நவராத்திரி நாட்களின் முக்கியத்துவத்தை கருதி துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் கோயிலை திறக்காமல் பிடிவாதமாக உள்ளது. ஏற்கனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோயில்களை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதனால் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அடங்கிய விடுமுறை கால அமர்வில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதாவது, விஜயதசமி தினத்தில் தான் குழந்தைகளுக்கு ஏடு தொடங்குதல் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும். அதனால் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும், என்றும் முறையிட்டார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்திரம், இது சம்மந்தமாக அரசின் கருத்துக்களை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோவில்களை திறப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை இன்று பிற்பகல் 1. 30 மணிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


Tags : Vijayadasami day ,Tamil Nadu government , விஜயதசமி ,கோவில்,தமிழக அரசு,நீதிபதிகள்
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...