×

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ல் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்ற புதுச்சேரி அரசு கடந்த 8ம் தேதி புதிய அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணைகள் அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்குவதாகும். மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு சாதகமாக இடஒதுக்கீடு அறிவிப்பாணைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அரசாணையை ரத்து செய்து, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
 இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், புதுச்சேரி அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர்கள் சந்திரசேகர் மற்றும் மாலா ஆகியோர்வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய அனுமதியளித்த நிலையில், இட ஒதுக்கீட்டை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது ஏன்? எனவே, புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிடுகிறோம். இந்த மனுவுக்கு முழுமையான விவரங்களுடன் புதுச்சேரி தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். 


Tags : Puducherry ,High Court , Puducherry local body elections should be suspended: High Court orders action
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை...