×

தீபாவளியை முன்னிட்டு நவ.1 முதல் 3ம் தேதி வரை 16,540 சிறப்பு பஸ்கள் இயக்கம்: சென்னையில் 6 இடங்களில் இருந்து புறப்படுகிறது.!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் பேருந்துகள் 6 இடங்களில் இருந்து இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில்  நடந்தது. இதில், போக்குவரத்துத் துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, போக்குவரத்து ஆணையர் சந்தோஷ் மிஸ்ரா, போக்குவரத்து சிறப்புச் செயலாளர் மற்றும் கூடுதல் செயலாளர், போக்குவரத்துத் துறை, காவல்துறை அலுவலர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், தாம்பரம் நகராட்சி ஆணையர், பூந்தமல்லி நகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும கண்காணிப்பு பொறியாளர், சிறப்பு அலுவலர்  தலைவர் அலுவலகம், போக்குவரத்துத் துறை, இயக்குநர், சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும்  அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் 1-11-2021 முதல் 3-11-2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 5-11-2021 முதல் 8-11-2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 1 முதல் 3ம் தேதி வரை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகர் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்,  போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி  மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்  (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,  தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம்,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை,  அரியலூர், திண்டுக்கல், விருதுநகர்,  திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு) இயக்கப்படும்.

இந்த பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்வதற்கு வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில்- 10 முன்பதிவு மையங்கள்;  தாம்பரம் சானடோரியம்-2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 12 இடங்களில் முன்பதிவு மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள  வசதியான www.tnstc.in, tnstc official app தவிர www.redbus.in, www.paytm.com  மற்றும் www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு  செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பொதுமக்களின்  வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கூறிய 4 பேருந்து  நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும். பொதுமக்கள் பேருந்துகளின்  இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார்  தெரிவிப்பதற்கு  ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை  (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக  கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 044 24749002, 1800 425 6151  என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதேபோல் பயணிகளின்  நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள  கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். பேருந்து  நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த  விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கூறிய பேருந்து சேவையை  முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறும், அரசு விதித்துள்ள  கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம்  செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Tags : Chennai ,Deepavali , 16,540 special buses for Deepavali from November 1 to 3: Departure from 6 locations in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...