சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் 24 ஆண் குழந்தைகளும், 25 பெண் குழந்தைகளும் எந்த அனுமதியும் பெறாமல் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தை மூட அம்பத்தூர் தாசில்தார் கடந்த 2015 ஜனவரியில் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், அம்பத்தூர் தாசில்தாரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்பகத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காப்பகத்தை நேரில் ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், காப்பகத்தில் தற்போது எந்த குழந்தைகளும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களின் தற்போதைய நிலை, அடிப்படை வசதிகள் நிர்வகிக்கும் நபர்கள் குறித்து அவ்வப்போது ஆய்வுகள் நடத்த வேண்டும் என்றார்.