×

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

ஜப்பானில் பெண்கள் கண்ணாடி அணிய தடை?

ஜப்பானில் பல முன்னணி நிறுவனங்களும், பெண் ஊழியர்கள் கண்ணாடி அணிய தடை விதித்திருக்கிறது. ஏற்கனவே பல நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களை ஹை ஹீல்ஸ் அணியச் சொல்லி கட்டாயப்படுத்தியதில் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், இப்போது கண்ணாடி அணிவதால் பெண்கள் கண்டிப்பான தோற்றத்துடன் இருப்பதாகவும், அதனால் கஸ்டமர் ஃப்ரெண்ட்லியாக இருக்க லென்ஸ் அணியச் சொல்லி கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இந்த விஷயத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சில ஜப்பானிய ஊடகங்கள், இது பெண்களை மட்டும் குறிவைக்கும் பாகுபாடு என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெண்களே சிறந்த டிரைவர்கள்


பெண்களை ஜோக் அடிக்க ஆண்கள் எப்போதும் பயன்படுத்துவது அவர்களின் சமையலுக்கு அடுத்து அவர்களின் வாகனம் ஓட்டும் திறனை தான். ஆனால் இப்போது இங்கிலாந்தில் வெளியாகியுள்ள ஒரு அறிக்கை அதையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டது. அதில் இங்கிலாந்திலும், வேல்ஸிலும் வாகன விதிகளை மீறிய 5,39,000 பதிவுகளில் 79% ஆண்கள்தான் என்றும் கூறியுள்ளனர். ஒரு ஆட்டோமொபைல் அமைப்பு இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. பெண்கள் பெரும்பாலும் கவனமாக வாகனங்கள் ஓட்டுவதால் அவர்களால் எந்த விபத்துகளும் பெரிய அளவில் நிகழ்வது கிடையாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பெண்கள் எப்போதும் பாதுகாப்பான, பொறுப்பான ஓட்டுனர்களாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

பணிப்பெண்ணுக்கு விசிட்டிங் கார்ட்

இங்கு நகரங்களில், பெரும்பாலும் வீட்டில் வேலை செய்பவர் ஒரு நாள் வராவிட்டாலும் பூகம்பமே வெடித்து, வீட்டுவேலைகள் மலை போல் குவிந்துவிடும். தினமும் நம் வாழ்க்கையை எளிமையாக்குவதில் பணிப்பெண்களுக்கு முக்கிய பங்குண்டு. அப்படித்தான் பூனாவைச் சேர்ந்த தனஷ்ரீ என்ற பெண், தன் வீட்டில் வேலை செய்யும் கீதாவிற்கு உதவ ஒரு விசிட்டிங் கார்டை தயாரித்து தந்துள்ளார். அதை ஆன்லைனில் பதிவிட்ட சில நேரத்திலேயே, கீதாவிற்கு பல வேலை வாய்ப்புக்கான அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. பணிப்பெண்கள் நமக்கு எவ்வளவு உதவியாய் இருக்கிறார்கள் என்று உணர்ந்து இது போல மரியாதையுடன் நாமும் அவருக்கு உதவ வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அம்மாவிற்கு மாப்பிள்ளை தேடும் மகள்


கணவரை இழந்து அல்லது பிரிந்து வாழும் பெண்கள் இப்போது மறுதிருமணம் செய்வது சகஜமாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன், தன் தாய்க்கு மறுமணம் செய்ததை முகநூலில் பதிவிட்ட கேரள மாணவர் பிரபலமானார். இப்போது, ஆஸ்தா வர்மா, சட்டம் படிக்கும் மாணவி. இவர் டிவிட்டரில் தன் அம்மாவிற்கு மாப்பிள்ளை வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ‘‘என் அம்மா மிகவும் அழகானவர். அவரை திருமணம் செய்துகொள்ள 50 வயதில் அழகிய ஆண் தேவை. அவர் நல்ல வேலையில், மதுப் பழக்கம் இல்லாத சைவம் மட்டும் சாப்பிடு
பவராக இருக்க வேண்டும்’’ என்ற விதியுடன், தன் தாயுடன் இருக்கும் செல்ஃபியையும் பதிவிட்டுள்ளார்.   

பெண்கள் பாதுகாப்பில் அதிகாரிகள் மெத்தனம்

நேத்தா ஆப் என்ற செயலியின் கருத்துக்கணிப்பில், இந்தியாவின் 22 மாநிலத்திலிருந்தும் மொத்தம் ஒரு லட்சம் பெண்கள் கலந்துகொண்டனர். அதில்
42 சதவீத பெண்கள் தாங்கள் பாதுகாப்பான சூழலில் வாழவில்லை என்று தெரிவித்துள்ளனர். 78 சதவீத பெண்கள், அதிகாரிகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்றும் கூறியுள்ளனர். இதில் தென் இந்தியாவைச் சேர்ந்த பெண்களைவிட வட இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பில் திருப்தி இல்லை என்பது இந்த கருத்துக்கணிப்பில் மிகவும் தெளிவாக தெரிகிறது.

ஒலிம்பிக்கில் நம் சிங்கப்பெண்கள்


2020ல், டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று புவனேஷ்வரில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஹாக்கியில் இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் பலபரீட்சை நடந்தது. ஏற்கனவே ஆடவர் ஹாக்கி அணி இதில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், மகளிர் அணி மீதும் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 5-5 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்த நிலையில் கடைசி நேரத்தில் இந்திய கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோல் அடித்து 6-5 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வென்றார். கடைசி நேரம் வரை ‘சக்தே இந்தியா’ பாலிவுட் படத்தின் கிளைமேக்ஸ் போல விறுவிறுப்பாகச் சென்ற ஆட்டத்தில் வெற்றிப் பெற்றதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.   

ஸ்வேதா கண்ணன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!