சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 2 வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர்கள் அதிகளவில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், உலக தரத்திலான பயிற்சி வழங்குதல், விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித்தல், வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்க தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 வீராங்கனைகள் சுபா மற்றும் தனலட்சுமி ஆகியோர் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 4*400 மீட்டர் ‘கலப்பு தொடர் ஓட்டத்தில்’ பங்கேற்று பெருமை சேர்த்த இந்த இரு வீராங்கனைகளையும் கவுரவப்படுத்தும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.