சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நர்ஸ் ஜோதிகா (20), அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள ஹோம் கேர் நிறுவனத்தில் தங்கி, வேலை செய்து வந்தார். அதன்படி, கடந்த மாதம் தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று நோயாளிக்கு சிகிச்சை அளித்தபோது, அங்கிருந்து நகைகளை ஜோதிகா திருடியதாக வீட்டு உரிமையாளர், ேஹாம் கேர் நிறுவனத்தில் தெரிவித்துள்ளார். அதன்பேரில், ஹோம் கேர் நிறுவன உரிமையாளர் பிரபாவதியின் கணவர் ராஜா மற்றும் சக ஊழியர்களான சந்தியா, தமிழ்மலர் ஆகியோர் ஜோதிகாவை 4 நாட்கள் தனி அறையில் அடைத்து, சரமாரியாக அடித்து துன்புறுத்தி நகைகளை கேட்டுள்ளனர்.
நான் எந்த நகையையும் திருடவில்லை என ஜோதிகா கூறியும் அவர்கள் தொடர்ந்து தாக்கியுள்ளனர். கடந்த 4ம் தேதி ஜோதிகாவிற்கு உடல் நிலை மோசமானதால் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அரசு மருத்துவமனையில் ஜோதிகாவை அனுமதித்த போது, நடந்ததை கூறியுள்ளார். உடனே மயிலாடுதுறை போலீசார் இதுபற்றி அரும்பாக்கம் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.