×

ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரால் சுட்டுக்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்மணியிடம் 6 சவரன் நகையை வழிப்பறி செய்து அங்கிருந்து 2 வடமாநில இளைஞர்கள் தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடிக்க முயன்ற போது கைத்துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். தப்பியோடிய கொள்ளையர்கள் பென்னலூர் ஏரி பகுதிக்கு சென்று பதுங்கி கொண்டனர். 10 குழுவினர் அந்த ஏரி பகுதியில் முகாமிட்டு கொள்ளையர்கள் தேடி வந்தனர். ட்ரோன் கேமரா உதவியுடன் கொள்ளையர்களை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்த காரணத்தினால் துப்பாக்கியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று இரவு முழுவதும் தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த ஏரி பகுதியில் பதுங்கி இருந்த ஒரு கொள்ளையனை பிடிக்க முயற்சிக்கும் போது அவர் தனது பாதுகாப்பிற்காக போலீசார் நோக்கி துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளார். அப்போது தங்களது பாதுகாப்பிற்காக சம்மந்தப்பட்ட கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். தற்போது இறந்த கொள்ளையனின் உடலை ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்களுக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? இறந்த கொள்ளையனின் விவரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sribuhattur , Police, Encounter
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கி...