×

அம்பத்தூர் ஏரியில் மிதந்த கூலி தொழிலாளி சடலம்: போலீசார் விசாரணை

ஆவடி: அம்பத்தூர் ஏரியில் மிதந்த கூலி தொழிலாளி சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பத்தூர் சோழபுரம், பொன்னம்பலம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியபோதும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகள் சுகன்யா கொடுத்த புகாரின்படி, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று மாலை அம்பத்தூர் ஏரியில் ராஜேந்திரன் சடலம் மிதந்தது.

இதுபற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி பக்தவச்சலம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சென்று ஏரியில் மிதந்த ராஜேந்திரன் சடலத்தை மீட்டனர். போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி, இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ambatur Lake , The body of a laborer floating in the Ambattur lake: Police investigation
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...