×

சோளிங்கரில் ஒரு மணிநேரம் அட்டகாசம் 47 பேரை கடித்து குதறிய வெறிநாயை அடித்துக் கொன்ற மக்கள்

சோளிங்கர் : சோளிங்கரில் ஒரு மணி நேரத்தில் 47 பேரை கடித்து குதறிய வெறிநாளை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஸ் நிலையம் அருகே சாலையில் வெறி பிடித்த நாய் ஒன்று நேற்று சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென அந்த நாய் அவ்வழியாக சென்றவர்களை துரத்தி கடித்து குதறியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மக்கள் நாயை விரட்டியடித்தனர். தொடர்ந்து பாட்டி குளம், போர்டின் பேட்டை, தோப்பிலம்மன் கோயில் பகுதிகள் வழியாக நாய் சென்றது. அப்போதும், சாலையில் நடந்து சென்றவர்களை கடித்து குதறியது.

சுமார் ஒரு மணி நேரத்திற்குள் 47 பேரை வெறிநாய் கடித்தது. இதில் படுகாயமடைந்தவர்கள் சோளிங்கர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் சோளிங்கரை சேர்ந்த சேகர்(51), முருகன்(57), அண்ணாமலை(25), பாரதி(56), கணேசன்(80), கண்ணன்(28), கணபதி(70), போளிப்பாக்கம் முனுசாமி(71), கூடலூர் நரசிம்மன்(85), அன்வர்திகான்பேட்டை ரங்கநாதன்(32), வெங்குபட்டு வீரபத்திரன்(45) ஆகிய 12 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து, வெறிநாய் சோளிங்கர் மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வெறிநாயை கற்கள், கட்டையால் அடித்து கொன்றனர். இந்த சம்பவம் அறிந்த எம்எல்ஏ முனிரத்தினம் சோளிங்கர் மருத்துவமனைக்கு சென்று நாய்க்கடிக்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா எனக் கேட்டறிந்தார். மேலும் சோளிங்கரில் வெறி பிடித்து சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். ஒரு மணிநேரத்தில் 47 பேரை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் சோளிங்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Cholingar , Sholingur: A riot broke out in Cholingar after 47 people were bitten in an hour and beaten to death by civilians.
× RELATED சோளிங்கரில் பாதிக்கப்பட்ட 2...