×

ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கி முனையில் பெண்ணின் நகை பறிப்பு: காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகையை பறித்துச்சென்று காட்டுக்குள் பதுங்கியுள்ள வடமாநில கொள்ளையர்களை தனிப்படை காவலர்கள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கியுடன் காட்டுக்குள் பதுங்கியுள்ள கொள்ளையர்களை பிடிக்க 2வது நாளாக தேடுதல் வேட்டையானது நடைபெற்று வருகிறது. இதற்காக காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் பென்னலூர் பகுதியில் நேற்று பணிக்கு சென்ற இந்திரா என்ற பெண்ணிடம் 2 வடமாநில வாலிபர்கள் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளனர். பின்னர் அவர்களை துரத்தி பிடிக்க சென்ற பொதுமக்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து உடனடியாக அருகேயுள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி, டி.ஐ.ஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இங்கு முகாமிட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். அப்போது கொள்ளையர்கள் விட்டுசென்ற 2 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே நேற்றையதினம் ஒரக்கடம் பகுதியில் டாஸ்மாக் ஊழியர்க் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் இருந்த மற்றொரு நபர் ராமு என்பவரின் உடலில் இருந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் துப்பாக்கி குண்டு எடுக்கப்பட்டது. இந்த துப்பாக்கி குண்டும் தற்போதும் ஸ்ரீபெரும்புதூர் காட்டுப்பகுதியில் கிடைத்துள்ள துப்பாக்கி குண்டும் ஒரே மாதிரி இருப்பதால் டாஸ்மாக் ஊழியர் கொலையில் இந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இதனால் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் காவல் துறை காட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், நெமிலி, செட்டிப்பேடு சுற்றுவட்டார பகுதியில் காவல்துறையினர் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து கொள்ளையர்களை தேடும் பணியானது 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை தொடங்கிய தேடுதல் வேட்டையானது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த தேடுதல் பணியில் ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காட்டுப்பகுதியானது 10 கி.மீ சுற்றளவில் உள்ளது. இந்த காட்டுப்பகுதி முழுவதும் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Tags : Sribuhattur , Jewelry flush
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே...