×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா!: ஜெகன் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த மலையப்ப சுவாமி..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 5ம் நாளான இன்று மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 5ம் நாளான இன்று மலையப்ப சுவாமி ஜெகன் மோகினியாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளியுடன் கூடிய மாலையுடன் எழுந்தருளினார். மகா விஸ்ணு பெண் வேடத்தில், நாச்சியார் திருக்கோலத்தில் கிருஷ்ணர் சமேதராக அருள்பாலிப்பதே இன்றைய அலங்காரம்.

ஜீயர்கள் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்ய அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களுக்கு மலையப்ப சுவாமி காட்சி தந்தார். பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று இரவு 7 மணிக்கு கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து தேவஸ்தானத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பிரமோற்சவ விழாவின் 4வது நாளான நேற்று மட்டும் திருப்பதி ஏழுமலையானை 27,056 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Tirupati Ezhumalayan Temple ,Malayappa Swami ,Jagan Mohini , Tirupati Ezhumalayan Temple, Brahmorsavam, Malayappa Swami
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத...