×

மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது : நிலக்கரி அமைச்சகம் விளக்கம்!

டெல்லி: மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பு உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படடுவது முற்றிலும் தவறானது என நிலக்கரி அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். டெல்லி மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்யும் அனல் மின்நிலையங்கள் உட்பட, அனைத்து அனல் மின்நிலையங்களிலும் நிலக்கரி இருப்பு நிலவரத்தை மத்திய மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர்,ஆர்.கே. சிங் ஆய்வு செய்தார்.

நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் கிடங்குகளில் இருந்து நேற்று மொத்தம் அனுப்பப்பட்ட நிலக்கரி 1.92 மில்லியன் டன்கள். ஆனால் மொத்த நுகர்வு 1.87 மில்லியன் டன்கள். ஆகையால், நுகர்வை விட, நிலக்கரி சப்ளை அதிகரித்துள்ளது. இது நிலக்கரி இருப்பு அதிகரிக்கப்பட்டு வருவதை காட்டுகிறது.மின் உற்பத்தி நிலையங்களின் தேவைகளை சந்திக்கும் அளவுக்கு போதுமான நிலக்கரி நாட்டில் உள்ளது. மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற பயம் முற்றிலும் தவறானது. மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு 4 நாட்களுக்கு மேல் போதுமானது. மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள, நிலக்கரி இருப்பு படிப்படியாக அதிகரிக்கும்

டெல்லி மின் விநியோக நிறுவனங்களுக்கு தேவைக்கேற்ப மின்சாரத்தை விநியோகிக்க, மத்திய மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.டிஸ்காம் நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க என்டிபிசி மற்றும் டிவிசி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிவாயுவும், அனைத்து இடங்களில் இருந்தும் பெற கெயில் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான மின்சாரம் கிடைத்தும், மின்வெட்டு நடவடிக்கையில் எந்த டிஸ்காம் நிறுவனங்களாவது ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் கனமழை பெய்தும், பொருளாதார மீட்பு காரணமாக, மின் தேவை அதிகரித்துள்ளது. டிஸ்காம் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப, முழு மின் விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ministry of Coal , மின் தட்டுப்பாடு,நிலக்கரி ,அமைச்சகம் ,விளக்கம்
× RELATED இந்தியாவில் கடந்த ஓராண்டில் நிலக்கரி உற்பத்தி 10.75% அதிகரிப்பு