புதுடெல்லி: ‘தனது சொந்தக் கட்சிக்காரர்கள் எதிர்த்தாலும், நாட்டு நலனுக்காக துணிந்து முடிவெடுக்க கூடிய தலைவர் பிரதமர் மோடி,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அமித்ஷா அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியை அனைவரும் சர்வாதிகார தலைவர் என்று கூறுகின்றனர். ஆனால், அவரை அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... அவர் மிகப்பெரிய ஜனநாயக தலைவர். நாட்டின் நலனுக்காக யார் கருத்து சொன்னாலும் அவரது வயது, பதவி என்று எதையும் பொருட்படுத்தாமல் பொறுமையாக கேட்கக் கூடியவர்.
அனைவருடைய கருத்துகளையும் இவ்வளவு பொறுமையாக கேட்கும் தலைவரை நான் பார்த்தது இல்லை. அவர் பல சந்தர்ப்பங்களில் நாட்டின் நலனுக்காக சில கசப்பான முடிவுகளையும் எடுத்துள்ளார். முக்கிய ஆலோசனை கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளில் அனைவரது பங்களிப்பும் இருக்கும். ரகசியமான முடிவாக இருந்தால் அதை வெளியே சொல்லக்கூடாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு சொல்வார். நாட்டை மாற்றுவதற்காகத்தான் அவர் அதிகாரத்தில் இருக்கிறார். அரசை நடத்துவதற்காக அல்ல. அதனால் தான் பாஜ.வினரே எதிர்த்தாலும் கூட, நாட்டு நலனுக்கான திட்டங்களை துணிந்து செயல்படுத்துகிறார்.
வரி ஏய்ப்பை தடுக்க அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டதால், கறுப்பு பணம் வெளியே வந்தது. இதனால், பொருளாதார மாற்றம் ஏற்பட்டது. இந்த முடிவால் பாஜ.வுக்கு வாக்களித்தவர்கள் கூட பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், இது போன்று செய்வதால் பிரதமர் மோடி எதையும் கொண்டு சென்று விடப் போவதில்லை. நாட்டின் நலனுக்காக செய்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதன் பிறகு, ஒவ்வொருவரும் மோடிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
எதிர்க்கட்சியினரே... மோடி ஆட்சியில் எதாவது ஊழல், முறைகேடுகள் இருந்தால் வெளியே கொண்டு வாருங்கள். எங்கள் தோல்வியை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். ஆனால், தனி மனிதரை விமர்சனம் செய்து அரசியல் தரத்தை தாழ்த்தி விடாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.