புதுடெல்லி: பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொலைதூர இடங்களில் இருந்தபடி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல், தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய, நாட்டிலேயே முதல் முறையாக நடமாடும் நீதிமன்றங்களை தெலங்கானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டவர் உட்பட நீதிமன்ற நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்டவர்கள் தொலைதூர இடங்களில் இருந்தபடி வாக்குமூலம் அளிக்க சிறப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் நீதிமன்றங்கள் தெலங்கானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய வாக்குமூலம் அளிப்பதற்கான நடமாடும் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது நாட்டிலேயே இது முதல் முறை.
தொலைதூர இடங்களில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொல்ல முடியாத பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள், மருத்துவர்கள் போன்றவர்களும், வயதானவர்கள், நோய் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களும் நடமாடும் நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தனிப்பட்ட பாதுகாப்புக்கு வெளிப்படையான அல்லது மறைமுக அச்சுறுத்தல் இருப்பவர்களும் தங்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதிப்பதே இதன் நோக்கமாகும். இந்த நடமாடும் நீதிமன்றங்களில், சிசிடிவி கேமராக்கள், லேப்டாப், பிரிண்டர், எல்இடி டிவி, வெப் கேமரா, இன்வெர்ட்டர், ஸ்கேனர், யுபிஎஸ், கூடுதல் மானிட்டர் மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை இருக்கும். இங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் விசாரணையிலும் வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் ஆஜராகலாம்.