புதுடெல்லி: நாட்டில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எல்லையில் சீன ஒருபுறம் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜ ஒன்றிய அமைச்சரின் மகன் கார் மோதியதில் விவசாயிகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் பாஜ தொண்டர்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து இரங்கலோ அல்லது எந்த கருத்தோ கூறாமல் இருந்து வருகிறார். இது பற்றி பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சீனா இங்கே தங்கி இருக்கிறது. எங்கே நமது நிலம்? பணவீக்கம் அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு, வேலையின்மை, விவசாயிகள் மற்றும் பாஜ தொண்டர்கள் கொலை சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும் பிரதமர் அமைதியாக இருக்கிறார். ஆனால், கேமரா, புகைப்படங்கள் இல்லாதது, உண்மையான விமர்சனம், நண்பர்கள் குறித்து கேள்வி எழுப்பினால் பிரதமர் உடனடியாக கடுமையாக பதிலளிப்பார்,’ என கூறியுள்ளார்.