செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் 146 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலேயே முதன்முதலில் அகழாய்வு நடந்தது. பின்னர் 2004ல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திருச்சி மத்திய தொல்லியல் துறை மண்டலம் சார்பில் அகழாய்வு செய்வதற்கான அனுமதி கடிதம் கிடைத்துள்ளது. இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகழாய்வு பணிகள், திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் 3 மாதம் நடைபெற உள்ளது.
இப்பணிகளை கனிமொழி எம்பி, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை, லண்டன், பெர்லின் போன்ற நகரங்களில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.