சென்னை:விழித்திரை அறுவை சிகிச்சை மீது நடைபெறும் இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர கருத்தரங்கின் 11-வது பதிப்பான ரெட்டிகான் நிகழ்ச்சி, டாக்டர் அகர்வால்ஸ் ரெட்டினா பவுண்டேஷன் சார்பில், நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தெலங்கானா மாநில ஆளுனரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான தமிழிசை சௌந்தரராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால், ராஜன் ஐ கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன்ராஜன், டாக்டர் அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகளின் இயக்குனர் மற்றும் கண் ஆராய்ச்சி மையத்தின் பொதுச்செயலர் டாக்டர் அதியா அகர்வால், மும்பையின் ஆதித்யா ஜோத் கண் மருத்துவமனையின் டாக்டர் நடராஜன் மற்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 600க்கும் அதிகமான கண் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இது குறித்து அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது: விழிப்படிக விழித்திரை அறுவை சிகிச்சையில் சமீபத்திய புத்தாக்க முன்னேற்றங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற ரெட்டிகான் கருத்தரங்கின் 11-வது பதிப்பு மிகப்பெரிய வெற்றி நிகழ்வாக அமைந்தது.
இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 1.5 கோடி பேர் பார்வைத்திறன் இழந்த நபர்கள் இருக்கின்றனர். இறுதி பார்வைத்திறனுக்கு மிக முக்கியமாக இருப்பது கண்ணின் ஒரு பகுதியான விழித்திரை. இது சேதமடையுமானால், பார்வைத்திறனும், தானியக்கமாக பாதிக்கப்பட்டு விடும். ஆகவே 30 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் அவர்களது விழித்திரையை குறித்த காலஅளவுகளில் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வயது முதிர்ச்சி தொடர்புடைய விழிப்புள்ளி சிதைவு மற்றும் நீரிழிவு சார்ந்த விழிப்புள்ளி திரவத்தேக்கம், போன்ற பிற கண் நோய்களோடு ஒப்பிடுகையில், வராமல் தடுக்கக்கூடிய பார்வைத்திறன் இழப்புக்கு முக்கிய காரணமாக இன்றைக்கு விழித்திரை நோய்களே இருக்கின்றன என்றார்.