×

மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப்பணி: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

செய்துங்கநல்லூர்: மத்திய தொல்லியல்துறை சார்பில்  ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை கனிமொழி எம்.பி., ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஆகியோர்  இன்று துவக்கி வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் தான் இந்தியாவிலேயே முதன் முதலில்  சுமார் 146 வருடங்களுக்கு முன்பே அகழாய்வு பணிகள் நடந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து கடந்த வருடமும் இந்த வருடமும் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டலம் தனியாக பிரிக்கப்பட்டது. 160 மத்திய நினைவுச்சின்னங்கள் மற்றும் 21 மத்திய மற்றும் தெற்கு மாவட்டத்தில் உள்ள தொல்லியல் தளங்களை கொண்ட திருச்சி மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கண்காணிப்பாளராக அருண்ராஜ் நியைமிக்கப்பட்டார். இந்த மண்டலம் பிரிந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் கடந்த 2019  மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதற்காக திருச்சி மண்டலம் தனியாக அமைக்கப்பட்டது. திருச்சி தொல்லியல் கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க  தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். முதல் கட்டமாக தொல்லியல் களத்தினையொட்டிய இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க தேர்வு நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இடங்களை தேர்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்ட இடங்களை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ்,  தென் மண்டல இயக்குனர் பெங்களூர் மகேஸ்வரி, டெல்லி  தொல்லியல் துறை நிர்வாக இயக்குனர் அஜய் அகர்வால், பொது இணை இயக்குனர் சஞ்சய் குமார் மஞ்ஞர் உள்பட முக்கிய அதிகாரிகள் பார்வையிட்டனர். உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார் உள்பட பலர் வந்தனர். விரைவில் இங்கு அமையவுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் இவ்விடத்தில் மத்திய அரசு இந்த வருடம் அகழாய்வு செய்யும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையையும் திருச்சி தொல்லியல் துறை மண்டலம் சார்பில் அதிகாரிகள் எடுத்து  வந்தனர். இந்த வருடம் மத்திய அரசு அகழாய்வு செய்வது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் டெல்லிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.  தற்போது அதற்கான அனுமதி கடிதம் கிடைத்துள்ளது. இதையடுத்து ஆதிச்சநல்லூர் மத்திய தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பரம்பில்  கனிமொழி எம்.பி., ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி  அமிர்தராஜ், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் அகழாய்வுப் பணிகளை  துவக்கி வைத்தனர்.
பின்னர் கனிமொழி எம்பி பேசியதாவது:-தென்னிந்தியாவிலேயே 5வது இடமாக ஆதிச்சநல்லூர்  அகழாய்வு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த  அருங்காட்சியம் மேலை நாடுகளைப் போன்று அமைக்கப்பட உள்ளது.   மத்திய அரசு சார்பில் ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது மேற்கொண்டு நிதி தேவைப்படுமானால் மத்திய அரசு கூடுதல்  நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு  நல தாசில்தார் ரமேஷ், ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்துத் தலைவர் பார்வதி சங்கர்  கணேஷ், கருங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் புங்கன், ஸ்ரீவைகுண்டம்  முன்னாள் காங்கிரஸ் வட்டார தலைவர் சிங்கப்பன், முன்னாள் யூனியன் கவுன்சிலர்  பொன்ராஜ், கருங்குளம் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பூல் பாண்டியன்,  சித்தார்த்தன், நைனார், ஐயப்பன் கந்தன் ராமர் ரமேஷ் பாபு கண்ணன், பொன்  கிருஷ்ணன், சிவசுப்பிரமணியன், மாரிச்செல்வம், முத்துகிருஷ்ணன், பால் துறை,  மாரியப்பன், ஆண்டி குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஐரோப்பா தரத்தில் அருங்காட்சியகம்
இதுகுறித்து  அகழாய்வு துறை சார்பில் வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இரும்பு கால தொல்லியல் தளமான ஆதிச்சநல்லூரை, தொல்பொருள் தளமாக அபிவிருத்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகளை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் விரைவில் மேற்கொள்ள உள்ளது. 2004-2005 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் நடந்த முந்தைய சுற்று அகழ்வாராய்ச்சியின் போது மனித எலும்புக்கூடுகள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்துக்கள், பானை ஓடுகள் மற்றும் இரும்புக்கால மக்களின் வாழ்விட தளத்தின் எச்சங்கள் கிடைத்துள்ளது.

அதன் பிறகு ஆதிச்சநல்லூர் மீது இந்திய அரசுவுக்கு மிகுந்த ஆர்வத்தை உருவாக்கியது. இந்திய தொல்லியல் துறை திருச்சி வட்டம் தற்போது ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான முன்மொழிவை எடுத்துள்ளோம். இந்த திட்டத்தை இயக்குநர் ஜெனரல் ஒப்புதல் கொடுத்துள்ளார். இது தென்னிந்தியாவில் அமையவுள்ள  ஒரே ஒரு தளமாகும். இந்தியாவில் உள்ள ஐந்து தொல்பொருள் இடங்களின் பட்டியலில் சின்னமான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  வருங்காலத்தில் நடைபெறவுள்ள ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி ஒரு முக்கிய முயற்சியாக இருக்கும். \\”இது கிமு 1,000க்கு முந்தைய நாட்டின் மிகப் பழமையான இரும்புகால தளங்களில் ஒன்றாகும்.

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில்தான் தென்னிந்தியாவிலேயே  முதல் முதலாக உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இங்கு எடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் பார்வைக்கு வைப்பதோடு மட்டுமல்லாமல் ஆய்வு நடந்த இடத்தில் கண்ணாடி மேற்கூரை அமைத்து அதன் மீது  சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று கண்டுபிடிப்புகளைப் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் ஐரோப்பா தரத்தில் அமைக்கப்பபட வுள்ளது.

 இங்கு தள அருங்காட்சியகத்தை அமைக்கும் பணியும், முற்காலத்தில் மீட்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் பணிக்கும் நாங்கள் அகழ்வாராய்ச்சியை ஒட்டிய நிலத்தை ஒதுக்கியுள்ளோம். இதற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நிலத்தினை தேடி எங்களிடம் ஒப்படைத்து வருகின்றனர் என்று மத்திய தொல்லியல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Adichanur ,Central Archeology Department , Excavation at Adichanallur on behalf of the Central Archaeological Department: Kanimozhi MP initiated
× RELATED மத்திய தொல்லியல் துறை சார்பில்...