×

குடும்பத்தை கவனிக்காமல் அடிக்கடி ஆசிரமம் சென்ற மனைவி அடித்து கொன்ற கணவன்: திருநின்றவூரில் பரபரப்பு

ஆவடி: திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணா தெருவில் வசிப்பவர் சந்திரமோகன் (49). இவர், சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூபர்வைசர். இவரது மனைவி செல்வி (33). தம்பதிக்கு கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு புவனா (8) என்ற மகளும், சஞ்சய் மோகன் (5) என்ற மகனும் உள்ளனர்.  இதற்கிடையில், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட செல்வி, அடிக்கடி கோயில் ஆசிரமங்களுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது, வீட்டில் உள்ள வேலைகளை சரிவர கவனிப்பதுகிடையாது. இதன் காரணமாக, தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி செல்வி விழுப்புரத்தில் உள்ள ஆசிரமத்திற்கு கணவரிடம் கூறாமல் சென்றுள்ளார்.

பின்னர், அங்கு இரவு தங்கி விட்டு நேற்று முன்தினம் மாலை அவர் வீடு திரும்பியுள்ளார். இது பற்றி சந்திரமோகன் கேட்டபோது, செல்வி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரமோகன், வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து செல்வியின் தலையில் சரமாரி தாக்கி உள்ளார். இதனால் ரத்தம் கொட்டிய நிலையில், அவர் வீட்டைவிட்டு வெளியேறி குபேர ஈஸ்வரர் கோயிலுக்கு சென்று படுத்துள்ளார். அங்கு இரவு 9.30 மணியளவில் செல்வி மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சந்திரமோகனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, அவர் ஆட்டோவில் கோயிலுக்கு விரைந்து சென்றார்.

பின்னர், செல்வியை மீட்டு திருநின்றவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு நள்ளிரவு 2 மணியளவில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக செல்வி கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வி வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.  புகாரின்பேரில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திரமோகனை நேற்று கைது செய்தனர். மேலும், போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி ஆசிரமத்திற்கு சென்று தங்கிய மனைவியை கணவன் அடித்து கொன்ற சம்பவம் திருநின்றவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : Thiruninravur , Husband beats wife to death for frequent visit to ashram without family
× RELATED திருநின்றவூரில் துணிகரம் வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் நகை கொள்ளை