நாகர்கோவில்: குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி வேலாயுதம் நூற்றாண்டு நினைவு விழா வடக்குதாமரைக்குளத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 3ம் தேதி உ.பி.,யில் நடந்த சம்பவம் என்பது 1919ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறது. அமைச்சர்கள் வரும்போது கருப்புக்கொடி காண்பிப்பது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட முறை.
உ.பி.யில் துணை முதல்வர் வரும்போது கருப்பு கொடி காண்பிக்க விவசாயிகள் திரண்டிருந்தபோது அவர்கள் மீது ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் மகனே காரை ஏற்றி 4 விவசாயிகளை கொன்றிருக்கிறார், ஒரு பத்திரிகையாளரை கொன்றிருக்கிறார், அதன் தொடர்ச்சியாக 8 பேர் இறந்துள்ளார்கள். உ.பி.யில் ஆட்சி நடத்துகின்ற சாமியார் யோகி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரில் உள்துறை அமைச்சர் மகன் இருந்ததும், விவசாயிகள் மீது மோதுவதும், பலர் படுகொலை செய்யப்பட்டதும் வீடியோவாக உள்ளது.
நாடே அதிர்ச்சியடைந்த சம்பவத்திற்கு பிறகும் ஆறு நாட்கள் கடந்த நிலையில் நாட்டின் பிரதமர் இந்த படுகொலை குறித்து பேசாமல் இருக்கிறார். அப்படி இருப்பதன் மூலம், வன்முறையை, அராஜகத்தை அவர் ஆதரிக்கிறார், ஊக்குவிக்கிறார். மோடி அரசு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத சர்வாதிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ள பாசிச அரசு ஆகும். பாசிச முறையில் நாட்டில் ஆட்சி நடத்த மோடி விரும்புகிறார். பாசிச கொள்கை ஒருபோதும் வெற்றபெறாது.
ஹிட்லர் கதி என்ன என்பது உலகம் அறியும். ஹிட்லருக்கு ஏற்பட்ட நிலை மோடிக்கு ஏற்பட்டுவிடக்கூடாது, அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது நாட்டிற்கே அவமானம் என்று குடிமகன் என்ற முறையில் நான் கருதுகிறேன். இவ்வாறு கூறினார்.