நெல்லை: தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய 5 ஊராட்சி 819 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. எனினும் மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறும், மழையில் நனைந்தவாறும் ஆர்வமுடன் வாக்களித்தனர். தென்காசி மாவட்டத்தில் கலிங்கபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை ஓட்டுப்போட்டார். அவருடன் அவரது தம்பி வை. ரவிச்சந்திரன், மகன் துரை வைகோ ஆகியோரும் வாக்களித்தனர்.
வாக்களித்த பின்னர் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போது 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். எனது மகன் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. நான் லட்சக்கணக்கான கி.மீட்டர்கள் நடைபயணமாக சென்றுள்ளேன். மக்கள் பிரச்னைகளுக்காக நிறைய முறை சிறை சென்றுள்ளேன். இதனால் என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பம் இல்லை. வருகிற 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் நிர்வாகிகள் என்ன கூறுகிறார்களோ அதன்படி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சபாநாயகர் அப்பாவு
நெல்லை மாவட்டத்தில் இன்று நடந்த 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் சபாநாயகர் அப்பாவு தனது சொந்த கிராமத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், ``அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் தேர்தல் நடைபெறுகிறது. நான் 18 வயது முதல் எனது சொந்த கிராமத்தில் வாக்கு செலுத்தி வருகிறேன். இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க தவறியதில்லை’’ என்றார்.