×

குன்னூர் அருகே பந்துமை ஏரி பகுதியில் காப்புக்காட்டில் சாலை அமைத்து மரங்கள் வெட்டி கடத்தல்

குன்னூர் : குன்னூர் அருகே பந்துமை ஏரி பகுதியில் காப்பு காட்டினை ஒட்டியவாறு சாலை அமைத்து மரங்கள் வெட்டி கடத்தி வரும் சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளில் காப்புக்காடுகள் அதிகமாக உள்ளன. இந்த காடுகளில் பட்டியலின மரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களை அழித்து அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் மற்றும் பணம் படைத்தவர்கள் மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களை வாங்கி விவசாயம் என்ற பெயரில் அவற்றை அழித்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்காக பல கி.மீ. தொலைவு வரை இரவு நேரங்களில் மலையை குடைந்து சாலை அமைத்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் இந்த சாலையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க சிலர் பட்டியலின மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் பட்டியலின மரங்களை வெட்டி கடத்தி வனத்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள பந்துமை ஏரி பகுதி அடர்ந்த காப்பு காடுகளை கொண்ட பகுதியாகும். இந்த பகுதியில் வனத்துறையினர் தினந்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இங்குள்ள தேயிலை தோட்டத்தில் மலையை குடைந்து நீண்ட தொலைவிற்கு சாலை அமைத்து வரும் சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காப்பு காட்டிற்கு ஒட்டியவாறு இரவு நேரங்களில் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் சாலை அமைத்து வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் இருந்து யூகாலிப்டஸ் வகை மரங்களையும் வெட்டி கடத்தியுள்ளனர்.

இவ்வகையான மரங்களை வெட்ட அனுமதி இருப்பினும் இதை பயன்படுத்தி பட்டியலின மரங்களை வெட்டி கடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘குன்னூர் அருகே உள்ள பந்துமை சுற்று வட்டார பகுதிகளில் பட்டியலின மரங்களாக அதிகளவில் உள்ளன. இங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட் உரிமையாளர்கள் நீண்ட தொலைவிற்கு மலையை குடைந்து சாலையை அமைத்துள்ளனர்.

இரவு நேரங்களில் மரங்களை வெட்டி கடத்தி வருவதாக தெரிகிறது. மேலும் இது போன்ற வனப்பகுதி அருகே சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் எவ்வாறு அனுமதியளித்து வருகின்றனர் என்பது தெரியவில்லை. இங்கு வனத்துறையினர் தினந்தோறும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இது போன்று சாலை அமைப்பது குறித்து கண்டுக்கொள்வதில்லை. எனவே வனத்துறையினரின் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bantumai Lake ,Gunnaur , The incident took place near Coonoor in the area of Bandumai Lake
× RELATED குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து...