×

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் பதவி விலகல்

டெல்லி: மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான கே.வி.சுப்பிரமணியன் பதவி விலகலை அறிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இப்பதவியில் இருந்துவந்த நிலையில் தனது பதவிக்காலம் முடிந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். இதனை மத்திய அரசும் உறுதி செய்துள்ளது. மீண்டும் ஆராய்ச்சிப் படிப்புகளைத் தொடர்வதால் பதவி விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கே.வி.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசத்துக்கு சேவை செய்வதற்காக வாய்ப்பு கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் நான் வடக்கு பகுதியில் உள்ள எனது அலுவலகத்துக்குச் செல்லும் போது எனது பொறுப்பை உணர்ந்து கொண்டு செல்வேன். என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய பணி காலத்தில் அரசிடம் இருந்து அதிகப்படியான ஒத்துழைப்பும், ஊக்கமும் கிடைத்தது. கடந்த 30 வருட பணி காலத்தில் பிரதமர் மோடியை போல் தலைவரை நான் பார்த்தது இல்லை. பொருளாதாரக் கொள்கைகள் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள உள்ளார்ந்த புரிதல், அத்துடன் அவருக்கு இருக்கும் சற்றும் பிசகாத உறுதி சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை வகுக்க வழி செய்தது என்று கூறியுள்ளார்.

கேவி சுப்பிரமணியன் தலைமை பொருளாதார ஆலோசகராக கடந்த டிசம்பர் 2017ல் பதவியேற்றார், இவர் பதவியேற்ற 5 மாதத்தில் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் பதவி விலகினார். தற்போது அரவிந்த் சுப்பிரமணியன் தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.வி.சுப்பிரமணியனின் பதவி விலகல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ள ட்வீட்டில், கே.வி.சுப்பிரமணியனுடனான பணிக்காலம் இனிமையானது. அவரது அறிவும், திறமையும், பொருளாதாரப் பிரச்சனைகளில் அவரின் பார்வையும் தனித்துவம் வாய்ந்தது. கொள்கை முடிவுகளில் அவர் சீர்திருத்தவாதி போல் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. அவருடைய அனைத்து முயற்சிகளும் சிறக்க வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chief Economic Adviser ,Central Government , KV Subramanian
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு