×

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன பணிக்கு இந்தியில் மட்டுமே பயிற்சி வகுப்புகள் : எம்.பி., சு. வெங்கடேசன் கண்டனம்!!

சென்னை : நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை இந்தியில் மட்டுமே நடத்தி வருவது கண்டனத்திற்குரியது என்று எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு எழுதிய கடிதத்தில்,  பொது துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கான அறிவிக்கையை ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று வெளியிட்டது .இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும். முதல் கட்ட தேர்வு அக்டோபர்  16ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பித்துள்ள ஓபிசி, எஸ்சி, எஸ்டி தேர்வர்களுக்கு தேர்வு முன்பாக பயிற்சி தரப்படும் .முக்கியமான மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும் ,இந்த முறை ஆன்லைனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. மிகவும் ஆர்வத்தோடு தமிழகத்திலிருந்து விண்ணப்பித்த தேர்வர்கள் இதில் பங்கேற்றனர்.முதல் நாளிலேயே இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தி வழியில்தான் பயிற்சி தர துவங்கினர். அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்தியில் தான் வகுப்புகள் நடக்கின்றன. இதை விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு எந்தவித பலனையும் தருவது இல்லை.

இதில் கொடுமை என்னவென்றால் ஆங்கில மொழி தாளுக்கான பயிற்சி வகுப்பையும் ,அவர்கள் இந்தியில்தான் நடத்தியிருக்கிறார்கள். ஆகவே தேர்வுக்கு முன்பாக ஒரு குறுகிய கால பயிற்சி ஒன்றை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும் .அதோடு தேர்வர்களுக்கு புரியும் மொழியில் நடத்திட வேண்டும் என்றும் வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நேரா வண்ணம் உறுதி செய்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : New India ,M.D. B. ,Chu. Venkatesan , நியூ இந்தியா ,எம்.பி., சு. வெங்கடேசன், கண்டனம்
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா