×

தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய ஹெல்மெட் கொள்ளையன் மயிலாடுதுறையில் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து கடைகளை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 120 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஒருவர் ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்று குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை நகரில் ஒரு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் சித்திரை விடங்கனை சேர்ந்த லட்சுமணன்(42) என்பதும், மயிலாடுதுறை பகுதியில் 3 இடங்களில் கடைகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதில் லட்சுமணன் கட்டுக்கோப்பாக உடலை வைத்திருந்ததால் போலீஸ் போன்று முடியை வெட்டி கொண்டு ஹெல்மெட் அணிந்தவாறு வலம் வந்துள்ளான். 2004ல் திருப்பூர் சென்று 7 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடியுள்ளான். லட்சுமணன் பார்ப்பதற்கு போலீஸ் போன்று இருந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்பட வில்லை. இதனால் திருட்டையே தனது தொழிலாளாக மாற்றினான்.

திருப்பூர் மாவட்டத்தில் 19 இடங்கள், திருச்சியில் 2 இடம், சென்னை பூந்தமல்லியில் ஒரு இடம், கோவை, கடலூர், திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை ,சிவகங்கை, மயிலாடுதுறையில் மொத்தம் 56 இடங்களிலும் ஹெல்மெட் அணிந்து திருட்டு சம்பவங்களை அரங்கேற்றியுள்ளான். கடைசியாக திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவை சிறையில் இருந்து கடந்த ஜூன் மாதம் வெளியே வந்த லட்சுமணன், மயிலாடுதுறை பகுதியில் 3 இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து லட்சுமணனை கைது செய்தனர்.

Tags : Mayiladuthurai , Tamil Nadu, handcuffs, helmet robber, arrested
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...